பாடிய நிலவே பாடிட பூமிக்கு வா….
1 min read
poem for SP Balasubramaninam By Assi Kannambi Rathinam
(இசை: ஆயிரம் நிலவே வா)
பாடிய நிலவே வா – இன்னும்
பாடிட பூமிக்கு வா
இசையோடு இனிமை தேடி
தமிழ்ப் பாடல்களைப் பாடி-புகழ்
தேடிய நிலவே வா
உன் குரலின் தேனிசையில்
ஓடும் ரத்தம் சாந்தம் பெறும்
உன் குரலின் பாடலிலே
உள்ளமெல்லாம் ரசனை பெறும்
பாடல் பதிவுக் கூடம் என்று
பூமிக்குள்ளே புகுந்தாயோ
பாடிக்கொண்டுதான் நீ இருப்பாய்
பாரிலுள்ளோர் கேட்பாரே
பதிவு செய்த பாடலெல்லாம்
பார் முழுதும் ஒலித்திருக்கும்
ஒலி ஒளிக் காட்சியாக
உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும்
கலை வாழ்க்கையில் மரணம்
இல்லையென்று உரைத்திருக்கும்
காலமெல்லாம் உன் இனிய குரல்
காற்றினிலே நிலைத்திருக்கும்.
ஆசி. கண்ணம்பிரத்தினம்