இந்தி நடிகர் சுஷாந்த் கொலை செய்யப்பட்டாரா?- எய்ம்ஸ் அறிக்கை
1 min readHindi actor Sushant not killed- AIIMS announcement
3/1/2020
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யபட்டாரா என்ற சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிவித்துள்ளது.
சுஷாந்த் சிங் சாவு
இந்தி நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் மாநிலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது பாலிவுட் வட்டாரத்தில், அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். எனவே அந்த மாநிலத்தி் இருந்தும் இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
இதனை அடுத்து சுஷாந்த் சிங் சாவு தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை அல்ல
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தடயவியல் துறை தலைவர் டாக்டர் சுதிர்குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து, சி.பி.ஐ.யிடம் தனது அறிக்கையை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையை ஆய்வு செய்து சுதிர்குப்தா கூறியதாவது:-
நாங்கள் எங்களது இறுதி அறிக்கையை அளித்துவிட்டோம். சுஷாந்த் சிங் மரணம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஏற்பட்டதுதான். தூக்கு போட்டதை தவிர அவரது உடலில் எந்த காயமும் இல்லை. உடல் மற்றும் ஆடையில் போராடியதற்கான அல்லது சண்டையிட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
மும்பை தடயவியல் அறிவியல் அறிக்கையிலும், எய்ம்ஸ் நச்சுயியல் ஆய்வகத்தின் ஆய்வில், கழுத்தில் தூக்குபோட்டதற்கான அடையாளம் மட்டுமே சுஷாந்த் உடலில் இருந்தது வேறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.