இந்தியாவில் தயாரித்த கொரோனா மருந்தில் பக்க விளைவு இல்லை
1 min readThere is no side effect of Corona medicine made in India
10/10/2020
கொரோனா வைரஸ் தொற்றுக்காக இந்தியாவில் உரவான ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தின் 2-ம் கட்ட பரிசோதனையில் இதுவரை யாருக்கும் எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிவரும் சூழலில் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இதுவரை ரஷ்யா மட்டுமே தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனாலும், ரஷ்யாவின் தடுப்பூசியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நியைில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பு மருந்து சோதனை மேலும் துரிதப்படுத்தியுள்ளன. இந்தியாவில் 3 தடுப்பூசிகள் பரிசோதனை அளவில் உள்ளன.
பக்கவிளைவு இல்லை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத்பயோடெக் நிறுவனமானது, ‛கோவாக்சின்’ என்னும் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்து வருகிறது. தமிழகத்தில் செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. முதல்கட்டமாக 30 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
தற்போது 2ம் கட்டமாக 150க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்தனர். இதில் யாருக்கும் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 3-ம் கட்டமாக 100 பேருக்கு பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:-
மனிதர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதிப்பதில் தற்போது 2 கட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளோம். அடுத்த சில நாட்களில் 3ம் கட்ட ஆய்வு தொடங்கவுள்ளது. இதுவரை கோவேக்சின் மருந்தால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. ஆனாலும், அந்த மருந்தின் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை தொடர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
அதற்கு இன்னும் 6 மாதம் வரை ஆகும். இவ்வாறு அவர் கூறினர்.