தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணம்
1 min readminister Duraikannu passes away
1/11/2020
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைந்தார்.
அமைச்சர் துரைக்கண்ணு
தமிழக அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்துவந்தவர் துரைக்கண்ணு. இவர் கடந்த 13-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இறுதி நிகழ்ச்சிக்கு சேலம் செல்லும் வழியில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். உடனே அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அன்று மாலையே சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சேர்க்கப்பட்டார்.
மரணம்
அதன்பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சை அளித்தும், உடல் நிலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்தது. எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்தும் 90 சதவீதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
துரைக்கண்ணுவின் உடல் நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மருத்துவமனைக்கு வந்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து உடல்நலன் குறித்து கேட்டறிந்தனர்.
இன்று மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், காமராஜ் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனை வந்து உடல்நலன் குறித்து விசாரித்து அறிந்தனர்.
மருத்துவர்கள் துரைக்கண்ணுவின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.
வாழ்க்கை வரலாறு
துரைக்கண்ணு 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்தார். அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு 2 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். அவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார்.
தஞ்சை சரபோஜி கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற துரைக்கண்ணு அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இணைந்தார்.
பாபநாசம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006, 2011, 2016 ஆகிய 3 தேர்தல்களிலும் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.
2016 ம் ஆண்டு, ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றபோது துரைக்கண்ணுவுக்கு அமைச்சர் பதவி வழங்கினார்.
தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் துரைக்கண்ணு இருந்தார்.