June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

“ஆள்” என்பது ஆண்பாலா? பெண்பாலா? ; க.முத்துமணி விளக்கம்

1 min read

Tamil Ilakkiyam by K.Muthumani

8/11/2020
ஆள்- என்ற சொல் ஆண்பாலா அல்லது பெண்பாலா என்பது பற்றி முதுகலை தமிழாசிரியர் க.முத்துமணி விளக்கம் அளித்துள்ளார்.

ஆண்பால்- பெண்பால்

எல்லாச் சொற்களுக்கும் பெண்பால் சொற்கள் உண்டா? என்று கேட்டால், இல்லை என்று துணிச்சலோடு சொல்லலாம்.அதைப்போலவே எல்லாச் சொற்களுக்கும் ஆண்பால் சொல்லையும் பெற முடியாது. முதலில் ஆள் என்பது ஆண்பால் சொல்தானா? என்பதையும் யோசிக்க வேண்டும்.
ஆள் பற்றி சிந்திக்கும் முன் வேறு சில சொற்களைப் பார்ப்போம்.
எடுத்துக்காட்டாக, அமைச்சர் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லை ஆண்பால் சொல் எனக்கருதி, அதற்குப் பெண்பால் சொல் தேடுதல் கூடாது. அமைச்சி… (இ, ஐ.. பெண்பால் விகுதிகள்) சேர்த்து சித்தி, அத்தை என்பதுபோல் அமைச்சி, அமைச்சை என்று எதையாவது!!!! எழுதி விடக்கூடாது. பெண் பாலுக்கும் அப்படியே அமைச்சர் என்ற சொல்லையே பயன் படுத்திக்கொள்ள வேண்டும், அமைச்சர், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அமைச்சர்தான். அர் என்பது மரியாதை விகுதியாக நிற்கிறது.அக்காலத்தில் பெண்கள் அமைச்சர் பதவியில் அமர்த்தப்படாத காரணத்தால் அப்படி ஒரு சொல் உருவாகாமல் போயிருக்கலாம் என்பது என் கருத்து.
மேலும் ‘அமைச்சு’ என்னும் சொல்லைத்தான் வள்ளுவர் பயன்படுத்துகிறார். அமைச்சு என்றாலே அமைச்சரைக் குறிக்கும், அமைச்சு என்றால் அமைச்சரையும் அரசு, வேந்து என்னும் சொற்கள் மன்னரையும் குறித்தன. அரசே! வேந்தே! என்றுதான் அழைத்தனர். அது இருபாலருக்கும் பொதுவான ஒரு சொல் பின்னாளில் நாம் மரியாதைக்காக அர் விகுதி சேர்த்து,அரசன் வேந்தன் அல்லது அரசர் வேந்தர் என்பது போல, அமைச்சர் என்று இப்போது வழங்குகிறோம்.

முதலமைச்சர் ஆணாயினும் பெண்ணாயினும் பொதுச் சொல்தான். முதல்வர் எனும் சொல் கூட அப்படித்தான் கல்லூரி முதல்வர், ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கலாம் . ஆளுநர், ஆணையர், செயலர் இப்படி எல்லாப் பதவிப் பெயர்களும் ஆணையும் பெண்ணையும் சேர்த்துதான் குறிக்கின்றன.நாட்டின் முதல்வர் ஆணோ பெண்ணோ? அவரை முதல்வர் என்று தான் கூற வேண்டும். பெண்ணாக இருக்கும் பட்சத்தில் முதல்வி என்று கூறுவது தவறு.
ஆசிரியர் எனும் சொல்லை நாமாக ஆண் பாலாக்கி, பெண் ஆசிரியரை, ஆசிரியை என்று பின்னாளில் மாற்றிக் கொண்டோம். இதில் ஒரு வேடிக்கையும் உண்டு. நாங்கள் சிறுவயதில் எங்கள் வகுப்பாசிரியர் ஆணாக இருந்தால் அவரை, சார் என்றும் பெண்ணாக இருந்தால் டீச்சர் என்றும் அழைப்போம்.உனக்கு இந்த ஆண்டு சாரா? டீச்சரா? என்று கேட்டதை நினைத்து இப்போது சிரிப்பும் வருகிறது.உனக்கு வாத்தியார் யாருடா? என்று தந்தையார் கேட்கும்போது எங்களுக்கு வாத்தியார் இல்லை. டீச்சர் தான். என்று கூறினோம். உண்மையில் டீச்சர்(Teacher) என்பது இருபால் ஆசிரியரையும் குறிக்கும் ஆங்கிலச் சொல். மாணவர் எனும் சொல்லும் அப்படித்தான் மாணவர் என்று சொன்னால், (pupils,students) கற்கும் தொழிலைச் செய்யும் ஆணையும் பெண்ணையும் குறிக்கும் பன்மைச் சொல். நாம் மாணவ-மாணவியர் என்று குறிப்பிடுகிறோம் அது சரியான பயன்பாடு அன்று. பொதுவாக மாணவர் அனைவரும் என்று சொன்னால் அங்கு கற்கும் தொழிலை மேற்கொண்ட ஆண்-பெண் அனைவரையும் குறித்து நிற்கும். புலவர் எனும் சொல்லும் அப்படித்தான் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் புலவர் புலவர் தான். கம்பனும் புலவர், காக்கைப்பாடினியம் புலவர்…பின்னாளில் வேறுபாடு அறிந்து கொள்வதற்காக பெண்பால் புலவர் என்று வழங்கினர். பெண்பால் விகுதி இல்லை என்பதற்காக, புலவி என்று சொன்னால் எவ்வளவு பொருள் மாறாட்டம் நடைபெறும் என்பதைச் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். கவிதை பாடும் எவரும் கவிஞரே. கண்ணதாசனும் கவிஞரே, விஷாலியும் கவிஞரே .
குண்டாக இருக்கும் ஒருவனைக் குண்டன் என்று கூறும் நாம் ஒரு பெண் குண்டாக இருந்தால் குண்டு என்பதோடு அம்மா என்பதை சேர்த்து குண்டம்மாள், குண்டாத்தி… என்று கூறுவதுண்டு.

ஆள் என்னும் சொல்லில் இருந்துதான் ஆளுமை(personality) பிறந்திருக்கும் என்று எண்ணுகிறேன். வேலையாள், கூலியாள், என்னும் சொற்களை எண்ணிப் பாருங்கள். இந்த வேலையை ஆளும் ஒருவர் என்று பொருள் தரும். ஆனால் ஆண் ,பெண் என்ற வேறுபாடு காட்டாது.
ஆட்சி, ஆளுநர், ஆளுகை, ஆளுமை எல்லாமே ஆள் என்னும் வேரில் இருந்து வந்தவைதான். முதலாளி என்று சொல்கிறோமே முதலை(capital, பணம் சொத்து) ஆள்பவன் அதாவது ஆட்சி செய்பவன் முதலாளி. தொழிலை ஆள்பவன் ஆட்சி செய்பவன் தொழிலாளி.இப்போது கூட இவற்றை ஆண்பாலில் சொல்கிறேன். நம்மோடு பகையை ஆளுபவன் பகையாளி. சேர்க்கையை ஆளுபவன் அதாவது நட்பு கொள்வதால் சேர்க்கையாளி.
நெல்லை மாவட்டத்தில் இச்சொல்லை சேக்காளி என்று கூறுவது வழக்கம்.
சீக்கு என்பது நோயைக் குறிக்கும். இச்சொல் தமிழ்ச்சொல் என்று கூற முடியாது. ஆனால் நோய்வாய்ப்பட்ட ஆணையும் பெண்ணையும் சீக்காளி என்று கூறுவர். நோய்வாய்ப்பட்டவர் நோயாளி.ஏனெனில் நோயை ஆட்சி செய்து கொண்டு உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.ஆனால் பெண்களையும் சேர்த்துதான் அது குறிக்கும். ஒன்றை ஆளும் தன்மை கொண்டவன் ஆள். மனிதன் முதலில் தன்னைத்தானே ஆளும் திறன் கொண்டவனாக இருக்க வேண்டும். அவனால்தான் மற்றவற்றையும் ஆட்சி செய்யமுடியும். அப்படி இல்லாதவனை இவன் எல்லாம் ஒரு ஆள்… என்று நினைத்து அவனோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.. என்று சொல்வோம். ஆளோடு ஆளாக நீயும் பேருக்கு வந்து நில்… என்று கூறுகிறார்கள் அல்லவா? அவன் எதற்கும் உதவாதவன் எண்ணிக்கையில் மட்டும் ஒப்புக்குச் சப்பாணியாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
கருவில் இருக்கும் குழந்தையையும், மூளை வளர்ச்சி இல்லாதவனையும், மயக்கத்தில் இருப்பவனையும், மனநிலை பாதிக்கப்பட்ட்டோரையும் ஆள் என்று மதிப்பதில்லை.காரணம் என்னவென்றால் அவனை அவனே ஆளும் சூழ்நிலையில் அப்போது அவன் இல்லை. அவன் மனமோ உடலோ வாய்ச்சொற்களோ அவனது ஆட்சிக்குள் இல்லாத நேரம். ஐம்பொறி ஆட்சிகொள் என்றான் பாரதி.
அக்காலத்தில் பெண்ணடிமைச் சமுதாயத்தில், பெண்ணுக்கும் ஆட்சித் திறன் இல்லை என்று கருதி, ஆடு மாடுகளுடன் அவளையும் இந்த வரிசையில் சேர்த்து விட்டது அன்றைய ஆணாதிக்கக் கொடுமை.முன்பு ஆணையாளர் செயலாளர் ஆட்சியாளர் என்றெல்லாம், ஆணை+ஆள்+அர்.. என்னும் சொல்லில் ஆள் என்பதையும் சேர்த்துப் பயன்படுத்தி வந்தோம்.பின்னாளில் ஆள் என்பதை விடுத்து நேரடியாக ஆணையர், செயலர், ஆட்சியர் என்று சொல்லத் தொடங்கி விட்டோம்.
பின்னாளில் இல்லத்தை ஆட்சி செய்யும் திறன் மட்டும் பெண்ணுக்கு இருக்கிறது என்று கருதி, அவளைக் குறிக்க இல்லாள், என்ற ஒரு சொல்லை உருவாக்கினர். அதனால்தான் இல்லாள் என்ற சொல்லுக்கு ஆண்பால் சொல்லில்லை. இல்லான் என்று சொன்னால் பொருள் இல்லாதவனைத் குறிக்கும். இல்லானை இல்லாளும் வேண்டாள். ஈன்றெடுத்த தாய் வேண்டாள்.
அவரவர் ஆட்சித்திறன் மாறுவதற்கு ஏற்றபடி இப்பெயர் மாற்றம் வருகிறது. சும்மா ஏவிய வேலையை மட்டும் செய்யும் அளவிற்குத்தான் அவனுடைய ஆளுமை இருக்கிறது. சொந்தமாக எதையும் சிந்தித்துச் செய்யமாட்டான் என்றால் அவனை கையாள் என்றும் கொஞ்சம் கூடுதலாக அவனுடைய ஆளுமை மேற்கொள்ளும் செயலில் வெளிப்படுகிறது என்றால் அவனைச் சிற்றாள்,நிமிர்ந்தஆள்… என்று ஆளும் திறனுக்கேற்ப சொல்லும் வழக்கம் உண்டு. பெரிய ஆளுமை என்பதால் பெரிய ஆள்..பெருமை+ஆள்… பெருமாள் என்று ஆனது. இன்றைய அறிவியல் சில விலங்குகள் கூட ஆளுமைப் பண்பு கொண்டு இருப்பதால், அவற்றையும் ஆள் என்று கூறலாம் என்று கருதுகிறது. அவ்வரிசையில் முதலில் குரங்குகள் இடம்பெறுகின்றன. நம் முன்னோர் அக்காலத்தில் வாழ்ந்து இப்போது இல்லாமல் போன ஆளுமை நிறைந்த ஒரு விலங்கிற்கு ஆளி அல்லது யாளி என்று பெயர் கூறியுள்ளனர். கோவில் சிற்பங்களிலும் தேரிலும் பார்க்கலாம். கும்பகர்ணன் போருக்குச் செல்லும்போது அவனது ரதத்தை ஆயிரம் குதிரைகள் ஆயிரம் யானைகள் ஆயிரம் சிங்கங்கள் ஆயிரம் யாளிகள் சேர்ந்து இழுத்துச் சென்றதாகப் படிக்கிறோம்
‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்பது இருபாலரையும் குறிக்கும். ஆட்கள் வேலைக்கு வந்துவிட்டார்கள் என்றால் இருபாலரையும் சேர்த்துதான் குறிக்கும். ஆட்கள் மீசையை முறுக்கினர் என்று கூறும் இடத்தில் மட்டும் ஆண்களைக் குறிக்கும். ஆட்கள் சேலை கட்டி இருந்தார்கள் என்று கூறும் இடத்தில் பெண்களைக் குறிக்கும். பேச்சாளர் என்றால் ஆணும் பெண்ணும் தான். யாரோ ஒருவர், பெண் பேச்சாளரைப் பேச்சாளினி என்றும் பெண் கவிஞரைக் கவிதாயினி.. என்றும் அழைப்பது மிகவும் செயற்கையான சொற்கள்.
இன்னுமொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். பருவம் எய்திய பெண்ணை, கிராமத்தில் ஆளான பொண்ணு என்றும், என்மகள் ஆளாகிவிட்டாள்.. என்றும் கூறுவதை நாம் அறிவோம். நான் ஆளான தாமரை வெகு நாளாகத் தூங்கல, என்று சினிமாவில் எழுதுவது எல்லாம் இன்றைய பழக்கம். அப்படியானால் குறிப்பிட்ட வயது வரை தன்னைத் தானே ஆட்சி செய்து கொள்ளும் திறன் இல்லாமல், அல்லது அவசியம் இல்லாமல் வாழ்ந்த சிறுமி, இனிமேல் தன்னைத்தானே ஆட்சி செய்து கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏற்படுகிறது. எனவே அவளை ஆள் ஆகிவிட்டாள் என்று கூறும் பழக்கம் வந்திருக்கிறது.
இதுகாறும் கூறிய விளக்கத்திலிருந்து ஆள் என்பது தனியாக ஆண்களையும் பெண்களையும் குறிக்கும் சொல்லன்று என்பது என்னுடைய கருத்து..அதனால் அச்சொல்லுக்குப் பெண்பால் சொல் என்று தனியாகத் தேடக் கூடாது.ஏனெனில் அது ஆண் பாலை மட்டும் குறிக்கும் சொல்லன்று . ஆள் என்பது ஆண் பாலையும் குறிக்கும். பெண் பாலையும் குறிக்கும் சொல்.மேலும் இது குறித்து விளக்கம் தரும் பெருமக்கள் விளக்கம் தாருங்கள். இன்னும் நன்றாக விளங்கிக் கொள்வோம்.
நன்றி.
(இதுதொடர்பாக முட்டாள் எனும் சொல்லுக்கான விளக்கத்தை அடுத்து இடம் பெறச் செய்வேன்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.