கடையத்தில் செங்கல் சூளை அதிபர் வெட்டிக்கொலை
1 min readBrick kiln tycoon murdered in Kadayam
27/11/2020
கடையத்தில் செங்கல் சூளை அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
செங்கல்சூளை அதிபர்
தென்காசி மாவட்டம் கடையம் நடுத்தெருவில் பொது நூலகம் அருகே வசித்து வந்தவர் கே.தங்கராஜ்(வயது 66). இவர் பிரபல செங்கல் சூளை அதிபர். இவரை கே.டி.ஆர். என்றே அழைப்பர். இவரது தந்தை பெயர் கிருஷ்ணன்.
கே.தங்கராஜின் பூர்வீகம் கடையம் அருகே புலவனூர். இவருக்கு 2 மனைவி. ஆனால் இரண்டாவது மனைவியுடன் தான் கடையத்தில் வசித்து வந்தார். முதல் மனைவிக்கு 4 பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு 2 பிள்ளைகள். அவர்கள் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள்.
முதல் மனைவி தனது பிள்ளைகளுடன் புலவனூரில் வசித்து வருகிறார்.
கே.தங்கராஜிக்கு கடையம் அருகே கீழ மாதாபுரத்தில் செங்கல் சூளைகள் உள்ளன. மேலும் கடையத்தில் தோட்டமும் இருக்கிறது.
வெட்டிக் கொலை
நேற்று ( வெள்ளிக்கிழமை) தங்கராஜ் கடையத்தில் உள்ள தோட்டத்திற்குச் சென்றார். மாலையில் அவர் தோட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கணவர் இறந்ததை கேள்விபட்டு அவரது இரண்டாவது மனைவியும் குழந்தைகளும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
குடும்பத்தகராறு
இந்த கொலைக்கு காரணம் என்னவென்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்கராஜ் தனக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் முதல் மனைவிக்கு 15 ஏக்கரும், இரண்டாவது மனைவிக்கு 25 ஏக்கரும் பிரித்துக் கொடுத்துள்ளார். இரண்டாவது மனைவிக்கு அதிகமாக சொத்து கொடுத்ததால் முதல் மனைவியின் குடும்பத்திற்கும் கோபம். இதனால் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.
கடந்த வாரம் அவரது முதல் மனைவியின் மகன்களுள் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அந்த இறுதி சடங்கிற்கு கூட தங்கராஜ் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தவிர இரண்டாவது மனைவிக்கு கொடுத்த நிலத்தின் வழியாக தான் முதல் மனைவிக்கு கொடுத்த நிலத்திற்கு செல்ல வேண்டுமாம். ஆனால் முதல் மனைவியின் மகன்கள் அந்த வழியாக வருவதற்கு தங்கராஜ் தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது.
முதல் மனைவியின் மகன் திருக்குமரன் (42) நேற்று(வியாழக்கிழமை) தனது வயலில் இருந்து வைக்கோல் கட்டை கொண்டு செல்லும் போது தனது நிலத்தின் வழியாக வரக்கூடாது என்று அவரின் தந்தையான தங்கராஜ் வழிமறித்ததாகவும் இதில் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதே தகராறு இன்றும் ( வெள்ளிக்கிழமை) ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் தங்கராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே எனவே திருக்குமரன்தான் தனது தந்தையை கொலை செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதனால் அவரை போலீசார் தேடி வந்தனர்.
போலீசில் சரண்
போலீசாரால் தேடப்பட்ட திருக்குமரன் பாவூர்சத்திரம் போலீசில் சரண் அடைந்தார்.
அவரிடம் இந்த கொலைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.