டெல்லியில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம்
1 min readFarmers protest by candlelight in Delhi
30/11/2020
டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி போராடினர்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை தொடங்கினர். இன்று ( திங்கட்கிழமை) 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலஙகளை சேர்ந்த விவசாயிகள் அரியானா-டெல்லி எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தடியடி
அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.
மெழுகுவர்த்தி ஏற்றி…
ஆனால், அரியானா-டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி செல்லும் வழியான காசியாபாத் எல்லையிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைற்கிடையில், சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் பிறந்தநாளான இன்று டெல்லி எல்லையில் போராட்ட களத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் காலை பிரார்த்தனை செய்தனர்.
டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், சீக்கிய மதகுரு குருநானக்கின் புகைப்படத்தை வைத்து அதை சுற்றியும் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து வழிபட்டனர்.
ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகள் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் ஏற்றப்பட்டன. இந்த மெழுகுவர்த்தி ஏற்றும் போராட்டத்தால் டெல்லி எல்லையான டிக்ரி, சிங்கு மற்றும் காசியாபாத் பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.