April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

‘புரெவி’ புயலின் இலக்கு, காயல்பட்டினம் அல்லது திருச்செந்தூர்! தென்தமிழகத்திற்கு கனமழை வாய்ப்பு

1 min read

The target of Purevi ‘storm, Kayalpattinam or Thiruchendur!

1-12-2020

இலங்கையை தாக்கியபின், தூத்துக்குடி மாவட்டத்தை குறி வைக்கும் ‘புரெவி’ புயல்! தாக்குப் பிடிக்குமா, தென்தமிழகம்?

தென் மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி புயலாகவும் உருவெடுத்துள்ளது.
“புரெவி” எனப்பெயரிடப்பட்டுள்ள அப்புயல், தற்போது இலங்கையின் திரிகோணமலைக்கு தெற்கே 400 கி.மீ. தொலைவிலும், தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.


நாளை (டிச.2) திரிகோணமலை அருகில் கரையை கடந்து இலங்கையைத் தாக்கும் இந்தப்புயல், மன்னார்வளைகுடா வழியாக தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து,
டிசம்பர் 4-ந் தேதி அதிகாலை பாம்பன்-கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், திருச்செந்தூர் வழியாக கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 செமீ மழை பதிவாகலாம்

இதுதொடர்பாக, வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல்கள் வருமாறு:-
புரெவி புயல் விளைவாக, டிசம்பர் 2 முதல் தென் தமிழகத்தில் மழை தொடங்கும். டிசம்பர் 3-ல் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் “அதிகனமழை” பெய்யும். 20 செ.மீக்கு மேல் பெருமழை பதிவாகலாம்.

விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.

தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது . அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதல் கனமழைக்கு வாய்ப்பு உண்டு.

புரெவி புயலானது, தென் தமிழக கடற்கரையை நெருங்கும் போது, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களிலும் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

தென் தமிழகத்தைப் பொருத்தவரை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை தனி கவனத்தில் கொண்டு வரவேண்டும். ஏனெனில் ஏற்கனவே அனைத்து அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.
தாமிரபரணி கரையோரம் வசிக்கும் மக்கள் கண்டிப்பாக வெளியேறவேண்டும். மின்சாரம் தடைபட வாய்ப்புள்ளது. வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.

இரவு-பகல் என தொடர்ந்து காற்றுடன் மழை பெய்யும் என்பதால் தாழ்வான பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் இருப்பது நல்லது.

எங்கெங்கு கனமழை?

மாஞ்சோலை, திருச்செந்தூர் காயல்பட்டினம், தூத்துக்குடி, குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், விளாத்திகுளம், ராமேசுவரம், ராமநாதபுரம், ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி, கோதையாறு, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பெருமழை பெய்யும். ஒட்டுமொத்த தென் தமிழகமும் நல்ல மழை பெறும்.

தெற்கு கேரள மாவட்டங்களான கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும்.

தமிழக தென்மாவட்டங்களில் டிசம்பர் 8-ந்தேதிவரை மழை நீடிக்கும் என்பதால் ஆற்றங்கரையோரம், குளங்கள், அணைக்கட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தை நோக்கி வரும் இந்தப்புயல், கடந்த வார “நிவர்” புயல் போல், அதிகப்படியான மழையை மட்டும் தந்து கடந்து செல்லட்டும்! வேண்டாம் சூறாவளி!!



-மணிராஜ்,
திருநெல்வேலி.


About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.