சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு
1 min readDenial of High Court permission to conduct census on caste basis
18/12/2020
சாதிவாரியாக மக்கள் கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும் என்று கேள்வி கேட்ட சென்னை ஐகோர்ட்டு அதற்கு அனுமதி மறுத்துள்ளது.
தமிழகத்தில் 2020-2021 ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பை, சாதிவாரியாக நடத்த உத்தரவிடக்கோரி ஆனந்தபாபு என்ற வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணா, பொங்கியப்பன் ஆகியோர் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, “இடஒதுக்கீடு நடைமுறையை முழுமையாக அமல்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம். இதுபோன்ற கணக்கெடுப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்துள்ளது. தற்போது இது நடைபெறாததால்தான் பல்வேறு சமுதாயத்தினர் தங்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்துகின்றனர்” என்று வாதிட்டார்.
தள்ளுபடி
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘சாதி இல்லாத சமுதாயத்தை நோக்கி பயணிக்கும்போது, சாதிவாரியாக ஏன் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்?’ என கேள்வி எழுப்பினர். பின்னர், ‘இந்திய அரசியல் சட்டத்தின்படி, மனுவில் கோரியுள்ள கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.