காஷ்மீருக்குள் புகுந்து பாகிஸ்தான் தாக்குதல்; இந்தியா பதிலடி
1 min readPakistan invades Kashmir; India retaliates
10.1.2021
காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
தாக்குதல்
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்று வருகின்றன. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று(சனிக்கிழமை) காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை ) மதியம் 3 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ரஜோரி மாவட்டத்தில் இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.