May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா தடுப்பூசி போட்ட 2 பேர் சாவு

1 min read

Death of 2 people who were vaccinated against corona

18.1.2021

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 2 பேர் இறந்துள்ளனர் என்றும் 580 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் இரண்டு வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நேற்றும், இன்றும் நடைபெற்றது.
தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் வராது என்றும் காய்ச்சல் மற்றும் லேசான உடல் வலி வரலாம் என்றும் இது சாதாரணமாக எல்லா தடுப்பூசிகளுக்கும் வருவதுதான் என்றும் அறிவிக்கப்பட்டது.

2 பேர் சாவு

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 பேர் இறந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவர் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) மாலை மரணம் அடைந்தார். அவரது உடலை 3 டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அதில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விளைவுகளால் அந்த நபர் மரணம் அடையவில்லை எனத் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் இன்னொருவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்தவர். இவருக்கு 43 வயது. நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவர், இன்று(திங்கட்கிழமை) மரணம் அடைந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப்பிறகுதான் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
உத்தரபிரதேசம், கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு பேர் மரணமடைந்து உள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுகாதார ஊழியர் மரணம் தடுப்பூசி தொடர்பானதல்ல; இரண்டாவது நபருக்கு பிரேத பரிசோதனை இன்று திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று( திங்கட்கிழமை) மாலை 5 மணி வரை நாடு முழுவதும் 1,48,266 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி போட்டபட்டவர்களில் 580 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டு உள்ளது, இதில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் கூறியவதாவது:&

ஆஸ்பத்திரியில் அனுமதி

இன்று 25 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 3 நாட்களில் 3,81,305 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 580 பேருக்கு காய்ச்சல், தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. இன்று கர்நாடக மாநிலத்தில் அதிகபட்சமாக 36,888 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7628 பேருக்கும், தெலுங்கானாவில் 10352 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 11588 பேருக்கும், டெல்லியில் 3111 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட், சத்தீஸ்கர், கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.