அடையாறு புற்று நோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மரணம்
1 min readAdyar Cancer Hospital cherman Dr. Santa passes away
19.1.2021
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா உடல் தகனம்
டாக்டர் சாந்தா
பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்து வந்தவர் டாக்டர் சாந்தா. இவர் முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
இந்த நி¬லியல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 93.
அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, பழைய அடையாறு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.பெசன்ட் நகர் மயானத்தில் இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
விருதுகள்
டாக்டர் சாந்தா மருத்துவ சேவைக்காக பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உள்பட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார். இந்த விருதுகள் மூலம் கிடைத்த பணம் முழுவதையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே அவர் செலவு செய்தார்.
வாழ்க்கை வரலாறு
டாக்டர் சாந்தா சென்னை மயிலாப்பூரில் 1927ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி பிறந்தார். விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் தான் இவரது தாய்மாமா ஆவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு டாக்டர் பட்டமும், 1955 ஆம் ஆண்டில் எம்.டி. பட்டமும் பெற்றார். அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் டாக்டராக தனது பணியை தொடங்கினார்.
அப்போது 12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவாக போற்றும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் இவர் பெரும் பங்காற்றினார்.
இவர் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்தார். இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவராகவும் இருந்துள்ளார்.
புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். உலகில் புற்றுநோய்க்கு எங்கு புதிய மருந்துகள் அல்லது புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், உடனடியாக அறிமுகம் செய்துவிடுவார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.