சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு
1 min readPhysical ill for Sasikal
20.1.2021
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலா
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
சசிகலாவுக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த அபராத தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரம் கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளது. சசிகலா அபராத தொகையை செலுத்தி இருந்தாலும், சிறை விதிமுறைகளின்படி அவர் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை என்று சிறை நிர்வாகம் கூறியிருந்தது.
அதேநேரம் அவரது விடுமுறையை கழித்து வருகிற 27-ந் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதுபோல, இளவரசி சார்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை இன்னும் கோர்ட்டில் செலுத்தப்படவில்லை. ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தினால், அவரை விடுதலை செய்யலாம் என்று கடந்த மாதமே(டிசம்பர்) பெங்களூரு தனிக்கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
சுதாகரனுக்கு தண்டனை காலம் முடிந்து ஒரு மாதம் ஆகிறது. ஆனால் அவர் அபராத தொகை செலுத்தாத காரணத்தால், இன்னும் விடுதலை ஆகாமல் சிறையில் இருந்து வருகிறார்.
இந்த வாரம் சுதாகரன் சார்பில் கோர்ட்டில் அபராத தொகை செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் ஏற்கனவே சிறை நிர்வாகம் அறிவித்தபடி வருகிற 27-ந் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக கூறப்பட்டது.
சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலையாகிறார் என்பதை பெங்களூரு சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவு
இந்த நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வருகிற 27ந் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது அவர்கள் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.