நெல்லையில் வங்கி மேலாளர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
1 min read40 pound jewelery robbery at bank manager’s house in Nellie
20.3.2021
நெல்லையில் நள்ளிரவில் வங்கி மேலாளர் வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி மேலாளர்
நெல்லை பேட்டையை அடுத்த காந்திநகரை சேர்ந்தவர் சையத் இப்ராகிம்(வயது 62). ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். இவரது மகன் மற்றும் மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இதனால் சையத் இப்ராகிம் தனது மனைவியுடன் காந்தி நகரில் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கதவை பூட்டி விட்டு அவர் தூங்க சென்றார். வீட்டின் பின் பக்கமாக இருந்த கிரில் கேட்டை பூட்டாமல், மரத்தினாலான கதவை மட்டுமே பூட்டி உள்ளார்.
நள்ளிரவு, வீட்டின் பின்பக்க கதவை திறந்து மர்மநபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் அங்கு இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
ரூ-.12 லட்சம்
இன்று காலை சையத் இப்ராகிம் மற்றும் அவரது மனைவி எழுந்து பார்த்தபோது பீரோ திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
அங்கு விரைந்து வந்த போலீசார் திறந்து கிடந்த பீரோவை ஆய்வு செய்தனர். மேலும் பின்பக்க கதவு வழியாக எவ்வாறு வந்தார்கள் என்றும் அவர்கள் ஆய்வு செய்தனர். திருட்டு போன தங்க நகை 40 பவுன் என்றும் அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், வீட்டு பணிக்கு வேலைக்கு வருபவர்கள் அல்லது வேறு யாரேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் நேற்றிரவு கொள்ளையடிக்க திட்டமிட்டு காந்திநகருக்கு வந்துள்ளனர். அப்போது சையத் இப்ராகிமின் வீட்டிற்கு அருகே உள்ள இன்னொரு வீட்டில் புகுந்து திருட முயன்றுள்ளனர்.
ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த மர்மநபர்கள் சையத் இப்ராகிமின் வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் வீட்டின் கதவு மற்றும் பீரோ ஆகியவை உடைக்கப்படாமல், திறக்கப்பட்டு இருப்பதால் வீட்டை பற்றி நன்கு தெரிந்தவர்களே யாரேனும் இதனை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை
இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.