கொரோனா பரவலை கண்காணித்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்; – தலைமை செயலாளர் அறிவிப்பு
1 min readMonitoring corona spreads and intensifying controls as needed; – Notice of the Chief Secretary
3-/4/2021
கொரோனா நோய் தொற்று பரவலை கண்காணித்து தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&
இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் கொரோனாநோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் இந்த தொற்று அதிவேகமாகவும், பன்மடங்கும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், அதேவேளையில் பஞ்சாப், கர்நாடகா, சதிஷ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், டெல்லி மற்றும் தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டும் 2.4.2021 அன்று மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா அவர்கள் தலைமையில் மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர் பேசுகையில், மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோய்த் தொற்று நம் நாட்டின் முக்கிய பிரச்சினை என்றும் சிறியநகரம் மற்றும் கிராமங்களில் இத்தொற்று உறுதியாவது கவலையளிப்பதாகவும் கூறினார்.
இச்சூழலில் இத்தொற்றினை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் பல்வேற வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்படுத்த அறிவுரை வழங்கினார்
பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளன்றுக்கு தொற்றின் நேர்மறை விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழ் கொண்டுவர அறிவுறுத்தினார். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை தொற்றின் நேர்மறை விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழாகவே உள்ளது என்ற போதிலும் சோதனைகளை அதிகப்படுத்த ஆணையிட்டதன் விளைவாக நாள் ஒன்றுக்கு 50,000 என்ற அளவிலிருந்து தற்பொழுது நாளன்றுக்கு 85,000 பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நோய்தொற்று ஏற்பட்டவரின் உடன் இருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தபட்சமாக 25 முதல் 30 நபர்களை விரைவாக கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
மேலும் நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு, மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அந்தப் பகுதி நோய்கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய்தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு கோவிட் கவனிப்பு மையம் அல்லது பிரத்தியேக கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்
கொரோனா தொற்றினை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு மீண்டும் வலியுறுத்தவேண்டும். இதை சட்டப்படி கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும்.
கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்களை குறைக்க அரசு வெளியிட்டுள்ள நிலையான சிகிச்சை நெறிமுறைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் மேற்கொண்டு தகவல்களை பெறவோ தங்கள் குறைகளை தெரிவிக்கவோ 24 மணி நேரமும் இயங்கும் ‘104’ தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நோய்த்தொற்று குறித்து தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கோவிட் பெருந்தொற்றினை பரவாமல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.