சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து அவதூறாக பேசவில்லை – உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
1 min readSushma Swaraj does not slander Arun Jaitley – Udayanithi Stalin
7.4.2021
தாராபுரம் பிரசாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து அவதூறாக பேசவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தாராபுரத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, முன்னாள் மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக திமுக இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அதில், என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். தாராபுரம் பிரசாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து அவதூறாக பேசவில்லை. ஒரு பகுதி உரையை மட்டுமே கவனத்தில் கொண்டு என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனது இடைக்கால விளக்கத்தை ஏற்றுக்கொண்டு முழு விளக்கத்தையும் அளிக்க கால அவகாசம் தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.