தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: சுகாதார செயலாளர் பேட்டி
1 min readThere is no shortage of vaccines in Tamil Nadu: Interview with Health Secretary
10.4.2021
தமிழகத்தில், கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கொரோனா பரவல்
நாளுக்கு நாள் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால், பொது மக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள விக்டோரியா கல்லூரியின் மாணவர் விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தற்போது மாநிலத்தில் 33,659 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சென்னையில் மட்டும் 12,861 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரித்து வருகிறோம்.
பற்றாக்குறை இல்லை
மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை. 18 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளன. தினசரி 2 லட்சம் டோஸ்கள் செலுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதனால், 9 நாளுக்கு தேவையான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
இவ்வாற அவர் கூறினார்.