June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

காசு/ சிறுகதை/ தபசுகுமார்

1 min read

Kasu/ Short story by Thabasu kumar

பிரசித்திப்பெற்ற கோவில்… மதியம் 11 மணி. அன்று கூட்டம் குறைவாக இருந்தது. காரில் வந்து இறங்கினார், தொழில் அதிபர் தணிகாசலம். பட்டுவேட்டி, பட்டு சட்டை கைவிரல்களில் வைரமோதிரங்கள், கழுத்தில் தங்க சங்கிலி மின்னியது. அவரைப் பார்த்ததும் பிச்சைக்காரர்கள் சூழ்ந்தனர்.
“அய்யாசாமி பிச்சைபோடுங்க, அய்யா மகராசா சாப்பிட்டு 2 நாளாகிவிட்டது. காசுபோடுங்க” என்று கெசஞ்சினர்.
தொழில் அதிபரின் உதவியாளர்கள் ஓடிவந்தனர். பிச்சைக்காரர்களைப் பார்த்து, “போங்க, போங்க, நிம்மதியாக சாமிகும்பிட விடமாட்டீங்களே, ஓடுங்க” என்றுவிரட்டினர்.
ஆனால் பிச்சைகார்கள் விடுவதாக இல்லை.
“அய்யா, அய்யா தர்மம் பண்ணுங்கய்யா” என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டனர். தொழில் அதிபரின் உதவியாளர்கள் அவர்களை பிடித்து கீழே தள்ளிவிட்டனர்.
பின்னர் பாதுகாப்பாக அவரை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். பூசை பொருள்களுடன் வந்த ஒரு உதவியாளர் தாம்பளத் தட்டை அர்ச்சகரிடம் நீட்டினார். அவர் அதைப் பெற்றுக் கொண்டு தொழில் அதிபரை வி.ஐ.பி. சிறப்பு தரிசன வழியாக சாமி சன்னதிக்குள் அழைத்து சென்று நிறுத்தினார். சாமிமுன் கைகூப்பி வணங்கினார், தொழில்அதிபர்.
இரண்டு கைகளையும் விரித்து, “ சாமி, எனக்கு பொன் இருக்கு பொருள் இருக்கு, ஆனா ஆஸ்திக்கு ஒரு குழந்தை இல்லை. சாமி உன்னிடம் கையேந்தி கேட்கிறேன் குழந்தை பாக்கியம் கொடு, எனக்கு பிச்சையாக போடு, பலமுறை கேட்டுவிட்டேன். நீ கண் திறக்கவில்லை. குழந்தை இல்லாததால் வேதனை அடைந்து என் மனைவி வீட்டை விட்டே வெளியில் வர மாட்டேங்கிறாள். குழந்தை செல்வத்தைக் கொடு உனக்கு கோபுரம் கட்டுகிறேன்” என்று கண்ணீர் சிந்தினார்.
சிறிதுநேரம் அமர்ந்து தியானம் செய்தார். அர்ச்சகர் பிரசாத தட்டுடன் வந்தார். அதை பெற்றுக்கொண்டு வெளியேவந்தார். உதவியாளரிடம் பிரசாத தட்டை கொடுத்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அங்கிருந்து கோவில் முன்பக்கம் வந்தார்.
“பிச்சைக்காரர்கள் இங்கு நின்றார்களே ஒருவரையும் காணவில்லையே. எங்கே போனார்கள், அவர்களுக்கு பிச்சைபோட வேண்டுமே” என்றார்.
உதவியாளர்கள் அங்கும் இங்கும் தேடினார்கள்.
அப்போது ஒருவர், “என்ன பிச்சைக்காரர்களை தேடுகிறீர்களா அங்கே மரத்தடியில் விவசாயி ஒருத்தர் அன்னதானம் போடுகிறார். அனனைவரும் சென்று விட்டார்கள்” என்றார்.
தொழில்அதிபர் அங்கே சென்று விவசாயிடம் என்ன பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடாமல் அன்னதானம் போடுறீங்க” என்றார்.
அதற்கு விவசாயி சிரித்தபடி, “நாட்டில் எல்லோரும் பிச்சைகாரங்க தான். அவங்க வெளியே நின்னுகேட்கிறாங்க நாம கோவிலுக்குள்ள நின்று கேட்கிறொம் அவ்வளவுதான். எனக்கோ கடவுள் அருளால் விவசாயம் நன்றாக இருக்கிறது. மனனைவி பிள்ளைகளுடன் வந்து ஏழைகளுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்துவைக்குறேன். அப்புறமா கோவிலுக்குள் சாமிகும்பிடுகிறேன்” என்றார்.
தொழில்அதிபருக்கு கன்னத்தில் அறறைந்தது போல் இருந்தது. அடுத்த அன்னதானம் குறித்து அவர் மனம் அசைபோட்டது.
–&வே. தபசுக்குமார், புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.