June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகர் விவேக் மரணம்; போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம்

1 min read

Death of actor Vivek; Body cremated with police respect

நடிகர் விவேக் மரணம் அடைந்தார். அவரது உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் விவேக்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் வசித்து வந்தார். அவர் நேற்று காலை வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்றார்.
உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மரணம்

ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59.
இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

உடல் தகனம்

இதையடுத்து மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கௌரவிக்கும் விதமாக போலீஸ் மரியாதையுடன், அவரது உடலை அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி நடிகர் விவேக்கின் உடலுக்கு, 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மூத்த மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் நடிகர் விவேக்கின் உடல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.
விவேக்கிற்கு மனைவியும் நந்தினி, தேஜஸ்வினி என்ற 2 மகள்களும் உள்ளனர். விவேக்கின் மகன் பிரசன்ன குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்ன கலைவாணர்

விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார்.

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.
இதனால் அவரது இறுதி ஊர்வலத்தின்போது அவரது ரசிகர்கள் மரக்கன்றுகனை எடுத்துச் சென்றனர்.

சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக், சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார்.
அவர் இறக்கும் முன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போதும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அவர் ஓமந்தூரர் அரசு ஆஸ்பத்திரியில்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அரசு ஆஸ்பத்திரியின் சிறப்பை காட்டவே தான் இங்குவந்து தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

இரங்கல்

விவேக் மரணத்துக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, முதல்&அமைச்சர், துணை முதல்&அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.