சினிமாத்துறையில் அடுத்தடுத்து 3 பேர் கொரோனாவுக்கு சாவு
1 min read3 consecutive deaths to corona in cinema
7.5.2021
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம் அடைந்தார். சினிமாத் துறையில் மேலும் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நடிகர் பாண்டு
கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்டு நகைச்சுவை நடிகர் பாண்டு அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தொடர்ந்து தீவி சிகிச்சை பிரிவில் உள்ளார். நடிகர் பாண்டுவுக்கு வயது 74.
சினிமாவில் அறிமுகம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பாண்டு, ‛‛கரையெல்லாம் செண்பகப்பூ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஏற்கனவே இவரது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜும் சினிமாவில் பிரபல நடிகராக இருந்ததால் அவர் மூலம் கிடைத்த வாய்ப்பால் சினிமாவில் நுழைந்தார். அதன்பிறகு தனக்கென நடிப்பில் ஒரு பாணியை உருவாக்கி அசத்தி வந்தார். பாட்டுக்கு நான் அடிமை, சின்னத்தம்பி, இது நம்ம பூமி, தெய்வாக்கு, காதல் கோட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
மகன்
பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் பின்டு வெள்ளச்சி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். மேலும் கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். முக்கியமாக திமுகவில் இருந்து எம்ஜிஆர்., விலகி அதிமுக., கட்சியை தொடங்கியபோது, அந்தக்கட்சிக்கு கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ கிராப் பாடகர்
அதேபோல், ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்னும் பாடல் மூலம் பிரபலமான பாடகர் கோமகனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
பாடகர் சாவு
என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் மூலம் பிரபலமான பாடகரும், நடிகருமான டிகேஎஸ் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.
அவர் என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் மூலம் பிரபலமானவர் பாடகரான டிகேஎஸ் நடராஜன். அவர் பாடல்கள் பாடியதுடன் படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
டிகேஎஸ் கலைக்குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார். அந்த குழுவில் இருந்ததால் தான் அவர் டிகேஎஸ் நடராஜன் என்று அழைக்கப்பட்டு வந்தார்.
1954ம் ஆண்டு வெளியான ரத்தபாசம் படம் மூலம் நடிகரான நடராஜன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக் என்று பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தவர். சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களை தன்னை கவனிக்கச் செய்தவர்.
கச்சேரிகளிலும் பாடி வந்த நடராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் இன்று காலை 6.30 மணிக்கு காலமானார்.
கடந்த வாரம் தான் இயக்குநர்கள் தாமிரா, கே.வி. ஆனந்த், மூத்த நடிகர் செல்லத்துரை என்று மூன்று பேர் காலமானார்கள். இந்நிலையில் இன்று நடராஜன் இயற்கை எய்தினார்.