தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
1 min read
Chance of rain for 5 days in Tamil Nadu
26/4/202
தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
5 நாட்கள் மழை
வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பீகார் முதல் தென் தமிழகக் கடலோரப் பகுதி வரை நிலவும் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரையிலான வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (சென்டி மீட்டரில்) குன்னூர் 3, குந்தா பாலம், சிவலோகம் தலா 2, போடிநாயக்கனூர், அவலாஞ்சி, குழித்துறை தலா 1 செ.மீ.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.