தஞ்சாவூர் அருகே சாலையோரம் வைக்கப்பட்ட பிரம்மாண்ட பேனர் சரிந்து பெண் பலி
1 min readWoman killed in roadside banner collapse near Thanjavur
29.4.2021-
தஞ்சாவூர் அருகே சாலையோரம் வைக்கப்பட்ட பிரம்மாண்ட பேனர் சரிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக இறந்தார்.
பேனர்
தமிழகத்தில் பேனர், கட்அவுட் விழுந்து பலர் இறந்துள்ளனர். இதனால் சாலையோரங்களில் பேனர் மற்றும் கட்-அவுட் வைக்க சென்னை ஐகோர்ட்டு தடை விதி்த்து உள்ளது.
ஆனாலும் பல இடங்களில் இந்த விதிமீறல் நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படி விதிமீறி வைக்கப்பட்ட பேனர் விழுந்து ஒரு பெண் பலியான சம்பவம் தஞ்சை அருகே நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
துக்க நிகழ்ச்சிக்கு…
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தை முத்துவீரப்பன் இறந்துவிட்டார். இதையடுத்து மேல மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் தனது தந்தையின் படத்திறப்பு விழாவிற்கு மிகப் பிரம்மாண்டமான அளவில் ரவிச்சந்திரன் பேனர் வைத்திருந்தார்.
சரிந்து விழுந்த பெண் சாவு
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்மணி பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மனைவி விஜயராணி (வயது55), திருவோணம் அருகே உட்பம் விடுதியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு நேற்று மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பரமசிவம் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறினார். மேல மேட்டுப்பட்டி பகுதியில் வந்தபோது ரவிச்சந்திரன் வைத்திருந்த பிரம்மாண்டமான பேனர் திடீரென விஜயராணி மீது சரிந்து விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த விஜயராணியை மீட்டு அங்கிருந்தவர்கள், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவலின் பேரில் திருவோணம் போலீசார் பேனரைக் கைப்பற்றி ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.