குஜராத்தில் இருந்து மூன்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் டெல்லிக்கு வந்தன
1 min readThree Oxygen Express trains arrived in Delhi from Gujarat
5.5.2021
குஜராத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று மூன்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்தடைந்துள்ளதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் பற்றாக்குறை
கொரோனா 2ஆம் அலை காரணமாக டெல்லியில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. மேலும், டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழக்கும் சபம்வங்களும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதுவரை சுமார் 40 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகத் தலைநகரில் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு ஆக்சிஜனை அளிக்காமல் இருப்பதே இதற்குக் காரணம் என டெல்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழலில், இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லிக்கு தேவையான முழு ஆக்சிஜன் கோட்டாவை வழங்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இதைச் செயல்படுத்தத் தவறியதாக மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்திருந்தது.
3 ரெயில்களில்…
இந்த நிலையில் மூன்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று டெல்லிக்கு வந்தடைந்துள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பியூஷ் கோயல் தனது டுவிட்டரில், “ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குஜராத்தின் ஹப்பாவிலிருந்து கிரீன் காரிடார் வழியாக டெல்லி கேன்ட்டை அடைந்துள்ளது, தலைநகரில் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்படுகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
டெல்லி நோயாளிகளுக்கு…
இதுதொடர்பாக அவர் தனது மற்றொரு டுவிட்டில், “நிரப்பப்பட்ட ஆக்சிஜன் டேங்கர்களைக் கொண்ட ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் குஜராத்தின் முந்த்ராவிலிருந்து பசுமை தாழ்வாரத்தின் வழியாக விரைவாக நகர்ந்து டெல்லியை அடைந்துள்ளது. இது டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சீராக வழங்குவதை உறுதி செய்யும்” என்று பியூஷ் கோயல் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டில், “ ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க டாடா நகரில் இருந்து மற்றொரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் பரிதாபாத்தை அடைந்துள்ளது. இந்த ஆக்ஸிஜன் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.