பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் 29 பேர் பலி
1 min read
Philippine military plane crash kills 29
4.7.2021
பிலிப்பைன்சின் ராணுவ விமான விபத்தில் 29 பேர் பலியானார்கள்.
விமான விபத்து
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 85 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானதாக, அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா தெரிவித்திருந்தார். இதுவரை 15 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை உயிருடன் மீட்டு விடலாம் என்ற பிரார்த்தனையுடன் முழு வீச்சில் மீட்பு பணியில், மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். .
இந்நிலையில் இந்த விபத்தில் இதுவரை 29 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலரை தேடும் பணி தொடர்வதாகவும் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
முன்னதாக இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் நடைபெற்ற ராணுவ அடிப்படை பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பட்டம் பெற்றவர்கள் என்றும் பயங்கரவாத தடுப்பு பணியிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தநிலையில், பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரான கர்னல் எட்கார்ட் அரிவலோ கூறுகையில், இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலால் ஏற்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.