For the first time in India, Corona is back to a Kerala student affected by Corona
13.7.2021
இந்தியாவில் முதன்முறையாக கொரோனா பாதித்த கேரள மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
உகான் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவி, செமஸ்டர் விடுப்புக்காக கேரளா வந்திருந்த நிலையில் அவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு தொற்று பாதிப்பில் இருந்து அவர் குணம் அடைந்தார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நபர் இந்த மருத்துவ மாணவி தான் ஆவார். திரிசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மீண்டும்
இந்த நிலையில், மேற்கூறிய மருத்துவ மாணவிக்கு மீண்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு தொடர்பாக டெல்லிக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததால், அந்த மாணவி கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.
அதில் அவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடும்படி அவரது உடல் நலனில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.