நாடாளுமன்றத்தில் தமிழில் கோஷம்
1 min readSlogan in Tamil in Parliament
28.7.2021
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி உட்பட சுமார் 10 எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனால் இரு அவைகளும் முடங்கின.
பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமை தாங்கினார் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.
நாடாளுமன்றத்தில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிணைந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் ஒரு விவாதம் நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்தனர்.
தமிழில் முழுக்கம்
இந்த நிலையில் மாநிலங்களவையில் விவாதம் கோரி முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வேண்டும், வேண்டும், விவாதம் வேண்டும் என்று தமிழில் முழக்கமிட்டனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் முழக்கமிடுவது தான் வழக்கம். ஆனால் நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை கூட்டத்தில் சட்டத் திருத்த மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டும், வேண்டும், விவாதம் வேண்டும் என்று தமிழில் முழக்கமிட்டனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் மட்டுமின்றி, மற்ற மாநில எம்பிக்களும் வேண்டும்…வேண்டும்…விவாதம் வேண்டும் என்று தமிழிலேயே முழக்கமிட்டனர்.
ஆனால் கடும் அமளிக்கு இடையே மந்திரி ஸ்மிருதி இராணி, சிறார் பாதுகாப்பு மற்றும் நீதிக்கான சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இது குறித்து முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் எம்பியுமான ஜெயராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“வழக்கமான மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் கோஷம் எழுப்புவார்கள். ஆனால் இந்த முறை வித்தியாசமாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் தமிழ் மொழி இணைத்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
10 எம்.பி.க்களுக்கு தடை
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி உட்பட சுமார் 10 எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகமாக செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மணிக்கம் தாகூர், டீன் குரியகோஸ், ஹிபி ஈடன், எஸ்.ஜோதிமணி, ரவ்னீத் பிட்டு, குர்ஜீத் அஜ்லா, டி.என்.பிரதாபன், வி.வைதிலிங்கம், சப்தகிரி சங்கர், ஏ.எம். ஆரிப், தீபக் பைஜ் ஆகியோர் ஆவார்கள். பின்னர் மக்களவை நடவடிக்கைகள் நாள் ஒத்திவைக்கப்பட்டன.