அமளி இன்றி இரு அவைகளிலும் ஓபிசி இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்
1 min read
Passing of OBC Reservation Bill in both of them without a hitch
11.8.2021
ஓபிசி பிரிவினர் யார் என்பதை வரையறுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா எதிர்க்கட்சிகள் அமளி இன்றி மக்களவையில் நிறைவேறியது.
ஓ.பி.சி. மசோதா
மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஓ.பி.சி வகுப்பினர் யார் என்பதை வரையறுக்க அதிகாரம் அளிக்கும் வகையில் 127வது சட்ட திருத்த மசோதாவான ஓ.பி.சி மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து மக்களவையில் ஓ.பி.சி மசோதா மீதான விவாதம் நடைபெற்றது,
இந்த கூட்டத்தொடரில் முதல் முறையாக, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி இல்லாமல் விவாதம் நடைபெற்ற மசோதா என்கிற பெருமையை இந்த மசோதா பெற்றது. மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் இந்த மசோதா குறித்து அறிமுகம் அளித்த பின்னர், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி பேசினார், அப்போது, அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யும் இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து விட்டனர் எனக் கூறினார்.
வாக்கெடுப்பு
இதனையடுத்து அரசியல் சாசன திருத்த மசோதா என்பதால் இது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. மசோதாவுக்கு ஆதரவாக 386 மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனையடுத்து, மாநிலங்களுக்கு ஓபிசி வகுப்பினரை வரையறுக்க அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேறியதாக மக்களவையில் அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும்..
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஓபிசி மசோதா நிறைவேறியது.
நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேறியதால் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்படும். எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்ததால் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.