ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட 78 பேரில் 16 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 16 of the 78 people brought in from Afghanistan
25.8.2021
ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட 78 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீட்டு வந்தவர்கள்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு காலமாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது. எந்த நேரமும் துப்பாக்கிகளுடன் வலம் வருகிற தலீபான்கள் வசம் அந்த நாடு சென்று விட்ட நிலையில், நிலைமை அச்சுறுத்தலாகவும், அபாயகரமானதாகவும் மாறி உள்ளது. அங்கு உள்நாட்டினருக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டினருக்கும் பாதுகாப்பு இல்லாத பரிதாப சூழல் நிலவி வருகிறது. அவர்களது உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை.
இதனால் உள்நாட்டு மக்களும் சரி, வெளிநாட்டினரும் சரி, அங்கிருந்து தப்பித்து வந்தால்போதும் என்று கருதுகின்றனர். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. காபூல் விமான நிலையத்தில் சிறிய அளவிலான இந்திய அதிகாரிகள் குழுவினர் இருந்து கொண்டு மீட்புப்பணியை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
கொரோனா
அந்த வகையில், ஆப்கானிஸ்தனில் இருந்து 25 இந்திய குடிமக்கள் உள்பட 78 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து விமானப்படை மூலம் தஜிகிஸ்தன் அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து ஏர் இந்திய மூலம், புதுடெல்லி விமான நிலையத்திற்கு வந்த 78 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 78 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 228-இந்திய குடிமக்கள் உள்பட 626 பேர் மீட்கபட்டு இந்தியா வந்துள்ளதாக மத்திய மந்திரி ஹர்தீப் புரி தெரிவித்துள்ளார்.