புத்தக பைகளில் கட்சித் தலைவர்கள் படங்களை பயன்படுத்தக் கூடாது; சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Party leaders should not use pictures in book bags; Chennai iCourt order
7/9/2021-
பள்ளி மாணவர்களின் புத்தகபைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிடக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புத்தகப் பையில் படம்
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி படங்கள் அச்சிடப்பட்ட புத்தகப்பைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவற்றை விநியோகிக்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், ஆட்சி மாற்றத்திற்கு பின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, முந்தைய முதலமைச்சர்கள் படங்கள் அச்சடிக்கப்பட்ட சுமார் 65 லட்சம் புத்தகங்கள், நோட்டுகளை வீணாக்காமல் அச்சடிக்கப்பட்ட அதே நிலையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு அந்த புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
இதை கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு பாராட்டுதல்களை தெரிவித்தனர். இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவில், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள் அடங்கிய பைகளில் பொது ஊழியர்களின் படங்கள் அச்சடிப்பது பொது நிதியை வீணடிப்பதாகும். அரசியல்வாதிகள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்காக இதுபோன்று மக்கள் பணத்தை செலவு செய்யக்கூடாது. எதிர்காலத்தில் இதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தற்போதுள்ள அரசு மாணவர்களுக்கான நோட்டு, புத்தக பைகளில் முதல்-அமைச்சரின் புகைப்படம் அச்சிடப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும். பொது நிதி இதுபோன்ற விளம்பரங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. இதை தற்போதைய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.