இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி கைது; மற்றொருவன் சுட்டுக்கொலை
1 min readPakistani terrorist arrested for trying to infiltrate India; Another was shot
28/9/2021
ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை, இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர். மற்றொருவன் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டான். இவர்கள், இந்தியாவில் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ராணுவத்தினர் தெரிவித்து உள்ளனர்.
பயங்கரவாதிகள்
காஷ்மீரின் உரி செக்டார் வழியாக 6 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதனையடுத்து ராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், பாகிஸ்தானின் பஞ்சாபை சேர்ந்த அலி பாபர் பாத்ரா(வயது 19) என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். மற்றொரு பயங்கரவாதி, ராணுவத்தின் தாக்குதலில் சுட்டு கொல்லப்பட்டான்.
இது தொடர்பாக ராணுவத்தின் காலாட்படையை சேர்ந்த மேஜர் விரேந்திர வாட்ஸ் கூறியதாவது:-
ஒருவன் கைது
எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவின்றி பயங்கரவாதிகள் நடமாட முடியாது. கடந்த ஒரு வாரமாக பல பயங்கரவாதிகள் எல்லையில் உள்ள முகாம்களில் நடமாடி வருகின்றனர். ராணுவத்தின் தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பயங்கரவாதிகளிடம் இருந்து, 7 ஏகே ரக துப்பாக்கிகள், 9 பிஸ்டல்கள், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.