நடிகர் ஷாருக்கான் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை
1 min read
Police raid actor Shah Rukh Khan’s house
21.10.2021
நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை அனன்யா பாண்டே வீடுகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஷாருகான் மகன்
மும்பையில் இருந்து கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் நடுக்கடலில் வைத்து போதைப்பொருள் தடுப்பு அதிகரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்றது தெரியவந்தது.
இந்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் ஜாமீன் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை விசாரித்த கோர்ட்டு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது.
தந்தை சந்திப்பு
இதையடுத்து ஆர்யன் கான், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி ஆர்யன் கான் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் தற்போது சிறையில் உள்ளார். இதற்கிடையில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருக்கும் தனது மகனை நடிகர் ஷாருக்கான் இன்று நேரில் சென்று சந்தித்தார்.
அதிரடி சோதனை
இந்த நிலையில் மன்னத் பகுதியில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டிலும், இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஷாருக்கானின் மகனுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கோர்ட்டில் தெரிவித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.