விமானம் இறங்கும் வசதியுள்ள விரைவு சாலை; மோடி திறந்து வைத்தார்
1 min read
Landing expressway; Modi kept it open
16.11.2021
உத்தரபிரதேசத்தில் விமானம் தரையிறங்கும் வசதியுள்ள விரைவு சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
விரைவுசாலை
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் இருந்து கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் 341 கி.மீ நீளமுள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலை ரூ.22,500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவு சாலையில் போர் விமானங்கள் தரையிறங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரைவு சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். முன்னதாக சாலை திறப்பு நிகழ்ச்சிக்கு ஹெர்குலஸ் ராணுவ விமானத்தில் மோடி வந்து இறங்கினார்.
சுல்தான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நேரம் குறையும்
உத்தரபிரதேசத்தில், பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலை தொடங்கி இருப்பதால் பல மாநில மக்கள் பயன் பெறுவர்.
டெல்லியில் இருந்து செல்லும் வாகன போக்குவரத்து நேரம் குறையும். பீகாருக்கு விரைவில் செல்ல முடியும். முதல்வர் யோகி ஆட்சியில் மக்கள் பலர் பயன் பெற்றுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் திறன்கள் மீதும் உ.பி., மக்களின் திறன்கள் மீதும் சந்தேகம் எழுப்பியவர்கள் யாராக இருந்தாலும், இன்று சுல்தான்பூர் வந்து அவர்களின் திறன்களை பார்க்கலாம். 3, 4 ஆண்டுகளுக்கு முன்னதாக வெறும் சாதாரண நிலப்பரப்பாக இருந்த பகுதி தற்போது நவீன விரைவு சாலையாக உருவாக்கப்பட்டுள்ளது.
சீரான வளர்ச்சி
3 ஆண்டுகளுக்கு முன்பாக பூர்வாஞ்சல் விரைவு சாலைக்கு அடிக்கல் நாட்டியபோது, இதே சாலையில் ஒருநாள் விமானத்தில் தரையிறங்குவேன் என நினைக்கவில்லை. நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சியும், நாட்டின் சீரான வளர்ச்சியும் சமமாக இருப்பது முக்கியமாகும். சில பகுதிகள் முன்னோக்கி செல்வதும், சில பகுதிகள் பல தசாப்தங்களாக பின்தங்குவதும் எந்த நாட்டின் வளர்ச்சிக்கும் சரியல்ல. இன்று இந்தப் பகுதி வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டின் செழிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாட்டின் பாதுகாப்பும் முக்கியம். பூர்வாஞ்சல் விரைவுச் சாலை அவசரகாலச் சூழ்நிலைகளில் இந்திய விமானப் படைக்கு எப்படி மேலும் ஒரு சக்தியாக மாறியுள்ளது என்பதை விரைவில் பார்க்கலாம். நமது போர் விமானம் விரைவில் அதிவேக நெடுஞ்சாலையில் தரையிறங்கும். பல தசாப்தங்களாக நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பைப் புறக்கணித்தவர்களுக்கு இந்த விமானங்களின் கர்ஜனை இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.