பிச்சை எடுத்து சேர்த்த ரூ.20 ஆயிரத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கிய மூதாட்டி
1 min read
The old lady who donated Rs. 20,000 to the temple
24.11.2021-
சிக்கமகளூருவில் உள்ள பாதாள ஆஞ்சநேயர் கோவிலுக்கு மூதாட்டி ஒருவர் தான் பிச்சை எடுத்து சேர்த்து வைத்த ரூ.20 ஆயிரத்தை நன்கொடையாக கொடுத்தார். முன்னதாக அவரை கோவிலுக்குள் வரவிடாமல் பக்தர்கள் விரட்டியடித்த பரிதாப சம்பவம் நடந்தது.
பிச்சை எடுத்த மூதாட்டி
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பாதாள ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை பக்தர்கள் புனரமைத்து வந்தனர். புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக யாகங்கள் நடத்தி கலச அபிசேகம், பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கோவில் முன்பு பிச்சை எடுக்கும் கெம்பஜ்ஜி(வயது 80) என்ற மூதாட்டி கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளார். அங்கிருந்த பக்தர்கள் அந்த மூதாட்டியை, கோவிலுக்குள் அன்னதானம் வழங்கும்போது வாருங்கள், இப்போது உள்ளே வரவேண்டாம் என தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதற்கு அந்த மூதாட்டி தான் கோவிலுக்கு நன்கொடை கொடுக்க வந்திருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பாத பக்தர்கள் அவரை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் மூதாட்டி வெளியேற மறுத்துள்ளார்.
ரூ.20 ஆயிரம்
இதனால் பக்தர்கள் கோவில் தர்மகர்த்தா ரமேஷ் என்பவரை வரவழைத்துள்ளனர். ரமேஷ் அந்த மூதாட்டியிடம் விசாரித்தபோது, தான் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.20 ஆயிரத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்குவதாக கூறி அவர் கையில் பணத்தை ஒப்படைத்தார். அதனை பெற்றுக்கொண்ட ரமேஷ் நடந்த தவறுகளுக்காக மூதாட்டியிடம் மன்னிப்பு கோரினார்.
பிச்சை எடுத்த பணத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கிய மூதாட்டியை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் கோவில் நிர்வாகிகள் மூதாட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்