ஒமிக்ரான் அச்சுறுத்தல்: கண்காணிப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2021/10/மத்திய-அரசு.jpg)
Omigron Threat: Federal Government Advice to States to Increase Surveillance
28.11.2021
ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பகுதிகளை உருவாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா
சீனாவின் உகானில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா இன்னும் உலகை விட்டு ஒழியவில்லை. ஆழிப்பேரலை போல அடுத்தடுத்து அலை அலையாக தாக்கி வருகிறது. இது ஒருபுறம் இருக்க கொரோனா வைரசில் பலவித உருமாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகையில் உருமாறிய கொரோனா தொற்றும் மனித இனத்தை தாக்கி வருகின்றன.
இந்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. போர்க்கால அடிப்படையில் நடந்து வரும் தடுப்பூசி பணிகளும் தொற்றை ஓரளவு கட்டுப்படுத்தி வருகிறது.
ஒமிக்ரான்
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு உருமாறிய கொரானா வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது. போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், இஸ்ரேல், பெல்ஜியம் என பல நாடுகளில் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. முந்தைய திரிபுகளை விட வீரியம் மிகுந்த வைரசாக கருதப்படும் இந்த தொற்று உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய வைரசால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உலக நாடுகள், பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நாடுகளுக்கு பயணத்தடைகளை விதித்து உள்ளன. மேலும் தடுப்பு நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளன.
எச்சரிக்கை
கொரோனா வைரஸின் உருமாற்றமான ஓமைக்ரான் வைரஸ் குறித்து உலக நாடுகள் அஞ்சி வரும் நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், பரிசோதனை தீவிரப்படுத்தி, கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பகுதிகளை உருவாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.