தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பை மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
1 min read
MK Stalin’s personal study of the effects of rain floods in Thoothukudi
2.12.22021
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
வெள்ள பாதிப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக பெரும்பாலான வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இதற்காக, முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2 மணியளவில் தூத்துக்குடி வந்தடைந்தார்.
தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு உட்பட்ட பிரையண்ட்நகர், அம்பேத்கர்நகர், ரகுமத் நகர் உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.