இந்தியாவில் பிப்ரவரிக்குள் ஒமைக்ரானால் 3-வது அலை; ஐ.ஐ.டி. விஞ்ஞானி கணிப்பு
1 min read
3rd wave by omega in India by February; I.I.T. Scientist prediction‘
7/12/2021
ஒமைக்ரானால் பிப்ரவரி மாதத்துக்குள் 3-வது அலை ஏற்படும் என்று ஐ.ஐ.டி. விஞ்ஞானி மனிந்திர அகர்வால் கணித்துள்ளார்.
ஒமைக்ரான்
கொரோனா உருமாறிய தொற்று 3-வது அலையாக அக்டோபருக்குள் தாக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். அதன்படி 3-வது அலை தாக்கவில்லை. இந்தநிலையில் வருகிற பிப்ரவரிக்குள் ஒமைக்ரான் தொற்றுடன் 3-வது அலை உச்சத்தை எட்டும் என்று கொரோனா கணிப்பு வியூக நிபுணரும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
1.50 லட்சம் பேர்
இப்போதைய கணிப்பு படி தற்போதைய புதிய வைரசுடன் வருகிற (2022) பிப்ரவரிக்குள் 3-வது அலை உச்சத்தை எட்டும். அப்போது நாட்டில் தினமும் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம். ஆனால் இது 2-வது அலையை விட மிதமானதாகவே இருக்கும்.
தற்போதைய புதிய மாறுபாடு அதிக பரவும் தன்மையை கொண்டது போல் தெரிகிறது. ஆனால் அதன் தீவிரம் டெல்டா மாறுபாட்டில் காணப்படுவது போல் இல்லை.
இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போது வரை இந்த தொற்று தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவில்லை. ஆனால் அங்கு தொற்று பரவல் மற்றும் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கை போன்ற தரவுகள் நமக்கு தெளிவான பிம்பத்தை தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.