நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்
1 min readDismissal of negative comments made by a separate judge regarding actor Vijay
25.1.2022
நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தபோது வரி தொடர்பான வழக்கில் தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்களை சென்னை ஐகோர்ட்டு நீக்கியுள்ளது.
சொகுசு கார் இறக்குமதி
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காருக்கு இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்து, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு, நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.