குடியரசு தினம்: வீரதீரச் செயலுக்கான பதக்கங்கள் அறிவிப்பு
1 min read
Republic Day: Announcement of medals for heroic deeds
25.1.2022
குடியரசு தினத்தையொட்டி வீரதீரச் செயலுக்கான பதக்கங்கள், சேவைப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குடியரசு தினத்தையொட்டி, மொத்தம் 933 காவல்துறையினருக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட உள்ளது.
வீரச் செயலுக்கான காவலர் பதக்கம் மொத்தம் 189 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வீரதீரச் செயலுக்கான பதக்கங்களில் தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கத்துக்கு 88 பேர் தேர்வாகியுள்ளனர்.
தகுதிமிக்க சேவைக்கான காவலர் பதக்கம் மொத்தம் 662 பேருக்கு வழங்கப்படுகிறது.
வீர தீரச் செயலுக்கான பதக்கம் பெறும் 189 பேரில், 134 பேர், ஜம்மு -காஷ்மீரில் வீரச்செயல் புரிந்தமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீரச்செயல் புரிந்தமைக்காக 47 பேருக்கும், வடகிழக்கு பிராந்தியத்தில் வீரச்செயல் புரிந்தமைக்காக ஒருவருக்கும் இந்தப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
பதக்கம் பெறுவோரில் 115 பேர் ஜம்மு – காஷ்மீர் காவல்துறையையும், 39 பேர் மத்திய ரிசர்வ் காவல் படையையும் (சி.ஆர்.பி.எப்.), 3 பேர் இந்தோ-திபெத்திய எல்லைக்காவல் படையையும், 2 பேர் எல்லைப் பாதுகாப்புப் படையையும், 3 பேர் சஹஸ்ர சீமா பால் படையையும், 10 பேர் சத்திஸ்கர் காவல்துறையையும், 9 பேர் ஒடிசா காவல்துறையையும், 7 பேர் மகாராஷ்டிரா காவல் துறையையும், எஞ்சியவர்கள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.