பள்ளி சத்துணவு கூடத்தில் யானையின் எலும்புக்கூடு
1 min readElephant skeleton in school canteen
29.1.2022
தேர்தல் பணிக்காக பள்ளிக்கூடம் மற்றும் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு யானையின் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
யானை எலும்புகூடு
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், தேர்தல் மையத்தை தேர்வு செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வாக்குச்சாவடி மையமாக ஒதுக்கப்பட்டுள்ள அந்த பள்ளியை வால்பாறை பேரூராட்சி தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அந்த பள்ளிக்கூடத்திற்கு அருகே உள்ள சத்துணவு கூடத்தை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அங்கு, சிதைந்த நிலையில் குட்டி யானையின் உடல் கிடந்ததை கண்டு தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குட்டி யானையின் சிதைந்த உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேதபரிசோதனைக்கு பின் குட்டியானையின் உடல் எரியூட்டப்பட்டது.
எப்படி வந்தது?
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், போதிய மாணவர் சேர்க்கை இல்லாததாலும், ஊரடங்காலும் இந்த பள்ளி நீண்டநாட்களாக பூட்டப்பட்டிருந்தது. அந்த சத்துணவு கூடத்தின் பின்பக்க சுவரில் துளை இருந்துள்ளது. அந்த துளை வழியாக சத்துணவு கூடத்தில் உள்ள அரிசி மற்றும் தானியங்களை சாப்பிட குட்டியானை உள்ளே வந்திருக்கலாம். பின்னர் வெளியே செல்ல வழியில்லாமல் சத்துணவு கூடத்திலேயே அந்த குட்டியானை உயிரிழந்திருக்கலாம். குட்டியானை இறந்து சில மாதங்கள் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவிலேயே யானையின் உயிரிழப்பு குறித்து உண்மையான தகவல் வெளியே வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.