போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min readFederal Government instructs Indians to leave Ukraine due to war tensions
15.2.2022
உக்ரைனில் போர் பதற்றம் ஏற்பட்டு இருப்பதால் அங்கிருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
போர் பதற்றம்
முன்னாள் சோவியத் மத்திய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன.
உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷியா சுமார் 1 லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ரஷியா மறுத்து வருகிறது.
வெளியேறுங்கள்
உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப பெற்றதுடன், தங்கள் நாட்டு மக்களையும் உடனே நாடுதிரும்ப வேண்டும் என எச்சரித்துள்ளன.
இந்த நிலையில், உக்ரைனில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், தங்கள் நிலை மற்றும் இருப்பிடங்களை உக்ரைன் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவேண்டாம் எனவும் மத்திய அரசு தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.