ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு- நடிகர் விஜய் மன்னிப்பு கேட்டார்
1 min read
Actor Vijay apologizes for pushing fans
19.2.2022
–
நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு வந்தபோது ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தன்னால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு நடிகர் விஜய் மன்னிப்பு கேட்டார்.
நடிகர் விஜய்
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்தனர். அதேபோல் அரசியல் கடசி தலைவர்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
அந்த வகையில், நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களிப்பதற்காக வந்தார்.
விஜயை பார்க்க வாக்குச் சாவடியில் மக்கள், ரசிகர் கூட்டம் கூடியதால், அங்கு சிறிது நேரம் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் வாக்களிப்பதற்காக வந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
மன்னிப்பு
வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த விஜய் வெளியே வந்து தன்னால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு அங்கு நின்றிருந்த மக்களிடம் மன்னிப்புக் கோரினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு விஜய் சைக்கிளில் வந்தது பெரும் விவாதப் பொருளான நிலையில் இந்த தேர்தலுக்கு காரில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.