குற்றாலத்தில் படகு சவாரி மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
1 min read
The District Revenue Officer inaugurated the voter registration camp at Kodalam
தென்காசி மாவட்டம்
குற்றாலத்தில், குற்றாலம் – ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாமினை மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாமினை இன்று (08.08.2026) மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி அவர்கள் தெரிவித்ததாவது,
தென் தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு தமிழகம் மட்டும் அல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகளுக்காக சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சாரல் திருவிழா தொடங்கிய சில நாட்களில் படகு சவாரி தொடங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போன காரணத்தினால் சாரல் திருவிழா முடிந்தநிலையில் இன்று படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள மேல வெண்ணமடை குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த படகு குழாமில் இரண்டு நபர் மிதி படகுகள் 30 நிமிடத்திற்கு ரூ.200 கட்டணம் என்றும், நான்கு நபர் மிதி படகுகள் 30 நிமிடத்திற்கு ரூ.300 கட்டணம் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படகு சவாரி காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இயக்கப்படுகிறது. படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பாதுகாப்பு கவசங்கள் அணிந்து படகு சவாரி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் மா,வீராசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் நித்திய கல்யாணி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மண்டல மேலாளர் ஜோமேக்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.