கடையம் நகைக்கடை உரிமையாளர் மகன் விபத்தில் பலி; நண்பர் படுகாயம்
1 min readKadayam jewelery shop owner’s son killed in accident; Friend injury
24/2/2022
கடையம் அருகே முதலியார்பட்டியில் மினி பஸ் மோட்டார் சைக்கிளில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். இவர் கடையம் நகைக்கடை உரிமையாளரின் மகன் ஆவார். இந்த விபத்தில் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
விபத்து
கடையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடையம் மெயின் ரோட்டில் நகைக் கடை (லட்சுமி ஜூவல்லரி) நடத்தி வருகிறார். இவரது மகன் ராஜ்குமார் (வயது 21).
இவர் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், இவரது நண்பரான கடையம் நடுத்தெருவை சேர்ந்த ஸ்ரீதரும் (21). நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பொட்டல்புதூருக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஸ்ரீதர் ஓட்டிச் சென்றார். ராஜ்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். இவரும் கல்லூரி மாணவர் ஆவார்.
பரிதாப சாவு
அவர்கள் முதலியார்பட்டி பகுதியில் சென்ற போது எதிரே வந்த மினி பஸ் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் மீது மினிபஸ்சின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதையறிந்த கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த ஸ்ரீதரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிந்து மினி பஸ்சை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவர் பிரகாசை தேடி வருகின்றனர்.
விபத்தில் இறந்த ராஜ்குமாரின் அண்ணன் கடந்த ஆண்டு விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.