மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
1 min read
Meenakshi- Sundareswarar Tirukkalyanam
14.4.2022
மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிறைவடைந்த நிலையில் மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் வீதி உலா நடந்தது.
சித்திரை
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை நிகழ்வான மீனாட்சி அம்மன் -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருக்கல்யாணம் முடிந்த நிலையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வர் சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ்புத்தாண்டு, சித்திரை திருநாள், திருக்கல்யாண நிகழ்வு என்பதால் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.