மேலூர் அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
1 min read
Mother commits suicide by jumping into well with 2 children near Melur
23.5.2022
மேலூர் அருகே இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பத்தகராறு
மதுரை மதுரை மாவட்டம், மேலூர் அருகே முத்துபட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கத்தப்பட்டியில் நான்கு வழி சாலை சுங்க சாவடி பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நித்யா(வயது 25). கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோபமடைந்த நித்யா அவரது மகள்கள் ரக்ஷனா(4) , தர்ணிகாஸ்ரீ(2) ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள பூமிநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேலூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் மற்றும் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பீர்தௌஸ்பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மேலூர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மோட்டார் பம்பு செட்டு மூலம் கிணற்று தண்ணீரை வெளியேற்றி கிணற்றினுள் இறங்கி நித்யா மற்றும் இரண்டு சிறுமிகளின் உடல்களை மீட்டனர். உடல்களை மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பிவைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக தாய் தனது மகள்களுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலூர் பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.