அமர்நாத் குகை கோவில் திடீர் வெள்ள பெருக்கு: 5 பேர் பலி
1 min read
Amarnath Cave Temple Flash Flood: 5 Killed
8.7.2022
மேக வெடிப்பு காரணமாக காஷ்மீரின் அமர்நாத் குகைக் கோவில் பகுதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் ஆற்றங்கையோரம் அமைக்கப்பட்ட கூடாரங்கள் சேதமடைந்தன. இதில் 5 யாத்திரீகர்கள் பலியாயினர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
வெள்ளம்
ஜம்மு – காஷ்மீரின் அமர்நாத்தில் உள்ள குகைக் கோவிலில் இந்த ஆண்டுக்கான யாத்திரை, ஜூன் 30ல் துவங்கி, ஆக., 11 வரை நடக்க உள்ளது.கடல் மட்டத்தில் இருந்து, 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் யாத்திரீகர்களின் பயணத்தையும் அவர்களின் பாதுகாப்பையும் கண்காணிக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
இந்நிலையில் அமர்நாத் குகை கோயில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேக வெடிப்பு காரணமாக இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான கூடாரங்கள் அடித்து செல்லப்பட்டன. இதில் தங்கியிருந்த 5 யாத்திரீகர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், இந்தோ திபெத் பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.