காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
1 min readTerrorist shot dead in Kashmir
30.7.2022
காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
பயங்கரவாதி
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பாரமுல்லா மாவட்டம் வானிஹம் பாலா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த மோதலின்போது பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 2 வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, என்கவுண்டர் நடந்த இடத்தில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.