குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
1 min readContinued flooding in Kurdala Falls- Tourists banned for bathing for 3rd day
3/4/2022
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றால அருவி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளது. இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இன்று முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. கடந்த சில நாட்களாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கூட்டம் சற்று குறைந்துள்ளது. இன்று காலையிலும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. இதனால் அனைத்து அருவிகளிலும் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால் பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் குறைவாகவே தண்ணீர் விழுகிறது. இருப்பினும் அங்கு யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை. மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் அறிவித்துள்ளனர்.