இந்திய, பாகிஸ்தான் பிரிவினையில் உயிர் தியாகம் செய்த மக்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
1 min read
Prime Minister Modi paid tribute to the people who sacrificed their lives during the partition of India and Pakistan
14.8.2022
இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர் தியாகம் செய்த மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
உயிர்த் தியாகம்
இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இருந்து 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினை உண்டானது. இதுபற்றி பிரதமர் மோடி கடந்த ஆண்டு குறிப்பிடும்போது, பிரிவினையின் வலியை ஒருபோதும் மறந்து விடமுடியாது. நமது லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் புலம் பெயர்ந்தனர். முன்பின் யோசிக்காமல் ஏற்பட்ட வெறுப்பு மற்றும் வன்முறையால் எண்ணற்றோர் உயிரிழந்தனர்.
நம்முடைய மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் ஆகியவற்றின் நினைவாக ஆகஸ்டு 14-ந்தேதி பிரிவினை பயங்கர நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என கூறினார்.
இதனை தொடர்ந்து, அரசின் முடிவும் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் அரசின் முடிவு பற்றி பிரதமர் மோடி கூறும்போது, நாம் விடுதலையை கொண்டாடுகிறோம். ஆனால் பிரிவினையின் வேதனை இன்றளவும் இந்தியாவின் நெஞ்சை பிளந்து கொண்டு இருக்கிறது. கடந்த நூற்றாண்டின் மிக பெரிய சோகங்களில் இதுவும் ஒன்று. பிரிவினையின்போது உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில், இந்திய மக்களின் வலி மற்றும் பாதிப்புகளை கவுரவிக்கும் வகையில், பிரிவினை பயங்கர நினைவுநாளை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம் என கூறினார். இதனையடுத்து, அந்த தினம் ஆகஸ்டு 14-ந்தேதி அனுசரிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார். இதுபற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின்போது, உயிரிழந்த மக்கள் அனைவருக்கும் நான் இன்று அஞ்சலி செலுத்துகிறேன். நமது வரலாற்றின் சோகம் நிறைந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட சூழலிலும், அதில் இருந்து மீள்வு பெற்று மகிழ்ச்சியுடனும், வெற்றியுடனும் மற்றும் மனவுறுதியுடனும் உள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.