முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி,விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை
1 min readFormer Ministers S.P. Velumani, Vijayabaskar house raided
13.9.2022
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டிலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினார்கள்.
சோதனை
அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்றது. மாலையில் நிறைவு பெற்றுள்ளது.
எஸ்.பி. வேலுமணியின் கோவை இல்லத்தில் சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றுள்ளது.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரு விளக்குகளை மாற்றும் ஒப்பந்தத்தில், எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களின்படி எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதைபோல புதுக்கோட்டை இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நிறைவு பெற்றுள்ளது. அவரது வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 8 மணி நேரமாக நடைபெற்றது.